ஊழலை எதிர்ப்பவர்களையும், ஊழல் பெருச்சாளிகளையும் ஒரே சிறையில் அடைப்பது நியாயமா?- விஜயகாந்த்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முருகன், பேரறிவாளன், சாந்தனை விடுவிக்க வேண்டும்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனைக்குள்ளான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்து, தூக்குத் தண்டனையில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்ளுகிறேன்.
ஊழல் பெருச்சாளிகளுடன் அடைப்பதா?
லஞ்சம், ஊழல் குற்றசாட்டின் காரணமாக கைது செய்யப்பட்ட ஊழல் பெருச்சாளிகளுக்கும் திகார் சிறை. லஞ்சம், ஊழலை எதிர்த்து போராடுபவர்களுக்கும் திகார் சிறை என்பது இன்றைய மத்திய அரசுக்கு நியாயமாகப் படுகிறதா?
கடந்த காலத்தில் என்ன செய்தார் கருணாநிதி?
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஜனநாயகக் கடமை ஆற்றவிடாமல் ஆளுங்கட்சியினர் சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கடந்த காலத்தில் மக்கள் தங்களுக்கு அளித்திருந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி ஜனநாயகக் கடமை ஆற்றத் தவறிய நீங்கள், இப்பொழுது மட்டும் என்ன புதிய ஜனநாயகக் கடமை ஆற்றப் போகிறீர்கள்?
முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்டின் மீது அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேடு காரணமாக அரசு நடவடிக்கை எடுக்கின்றபோது, அவர் இஸ்லாமியர் என்பதால்தான் நடவடிக்கை எடுப்பதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். அப்பொழுது நான் சட்டமன்றத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறை குடியரசுத் தலைவராக வருவதை வேண்டுமென்றே தடுத்தவர் கருணாநிதி என்றும், தனது சட்டமன்ற பொற்கால விழாவிற்கு கலாம் வரவில்லை என்ற கோபத்தால் பழி வாங்கியவர் கருணாநிதி என்றும் சுட்டி காட்டினேன்.
''நான் பார்த்தா பைத்தியக்காரன், பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்''
இதற்கு நேரடியாகப் பதில் கூற இயலாத கருணாநிதி, பைத்தியக்காரர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி, காலத்தையும், கண்ணியத்தையும் வீணாக்க விரும்பவில்லை என்கிறார். எனக்கு இந்த நேரத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பாடிய "நான் பார்த்தா பைத்தியக்காரன், உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்" என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
எந்தக் காலத்தில்கருணாநிதிக்கு கண்ணியம் இருந்தது?
எந்த காலத்தில் கருணாநிதி கண்ணியத்தோடு பேசினார்? மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜ், பக்தவச்சலம், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போன்றவர்களை எல்லாம் கருணாநிதி பேசியதை இப்போது எடுத்துச் சொன்னால் அவர் கண்ணியம் காற்றில் பறந்து விடும் என்று காட்டமாக கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications