கடைசி மூச்சு இருக்கும் வரை காங்கிரஸில் தான் இருப்பேன்: சிரஞ்சீவி பேட்டி
டெல்லி: என் வாழ்நாள் முழுவதும் இனி காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன் என்று சொந்தக் கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்த நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சில ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை துவங்கினார். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் சிரஞ்சீவியின் கட்சி 18 இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைப்பது என்று சிரஞ்சீவி முடிவு செய்தார்.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணையப் போவதாக தெரிவித்திருந்தார் சிரஞ்சீவி. ஆனால் சோனியா அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி முன்பு நேற்று காங்கிரஸில் இணைந்தார் சிரஞ்சீவி.
இதை பெரிய விழாவாக நடத்த நினைத்திருந்தார் சிரஞ்சீவி. ஆனால் சோனியா மறுக்கவே எளிய விழாவாக நடந்தது.
காங்கிரஸில் இணைந்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியாதவது,
எனது லட்சியத்தை நிறைவேற்ற இன்னொரு சக்தி தேவைப்பட்டதால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். காங்கிரஸில் இருந்து கொண்டு நான் மக்கள் பணி செய்வேன். இன்று முதல் நான் காங்கிரஸ்காரன். என் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன்.
காங்கிரஸில் சேர்ந்துள்ளதை கடவுள் எனக்கு கொடுத்த சிறந்த வாய்ப்பாக நினைக்கிறேன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளில் எதிர்கால பிரதமர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்ததில் பெரு மகிழ்ச்சி. இது எனது அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். எதிர்காலப் பிரதமர் ராகுல் காந்தி தான். எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று கட்சியை வளர்க்க பாடுபடுவேன் என்றார்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் நீங்கள் ஊழல் புகார்களில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸில் இணைந்துள்ளீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு கடவுள் போன்று ஊழலும் அனைத்து இடங்களிலும் உள்ளது என்றார்.