மாமனார் மாமியார் நிராகரித்தனர்-காதலன் கைவிட்டார்-போக வழியின்றி தவிக்கும் ஆசிரியை
சென்னை: வீட்டிற்கு தெரியாமல் காதலனை பதிவு திருமணம் செய்து கொண்ட காதலி, சொந்த வீட்டிலும் இடமில்லாமல், காதலன் வீட்டிலும் ஏற்றுக் கொள்ளாமல் போராடி வருகிறார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரை சேர்ந்த ராமானுஜம் மகள் பிரமிளா (21). தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையான இவர், தலையாரிபாளையத்தை சேர்ந்த ஜெயன் (23) என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
பட்டதாரியான ஜெயன் வேலை தேடிவரும் நிலையில், இருவரும் கடந்த பிப்ரவரி மாதம், பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவீட்டாருக்கும் தெரியாமல் அவரவர் வீடுகளில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், பிரமிளாவிற்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கிய போது, அவர் உண்மையை வீ்ட்டாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, பிரமிளாவின் வீட்டார் அவரை, கணவன் ஜெயனின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவலை அறிந்த ஜெயன் அவரது வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார். ஜெயனின் பெற்றோரிடம், பிரமிளா நடந்த உண்மைகளை கூறினார். ஆனால்அவர்களோ, அவரை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். எனினும் தொடர்ந்து பிரமிளா, ஜெயனின் வீட்டின் முன் நின்றதால், வீட்டை பூட்டிவிட்டு அவர்களும் வெளியே சென்றுவிட்டனர்.
ஜெயனின் வீட்டில் தன்னை மருமகளாக ஏற்றுக் கொள்ளாத வரை அந்த இடத்தில் இருந்து செல்ல முடியாது எனக் கூறி, அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்த துவங்கினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதானப்படுத்தியும், அதை ஏற்காத பிரமிளா தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications