எங்கள் மகளைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசினர்: கேரள கன்னியாஸ்திரியின் பெற்றோர் பரபரப்பு புகார்
கொல்லம்: கேரளாவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கன்னியாஸ்திரி ஆன்சியை யாரோ கொன்று தான் தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளனர் என்று அவரது பெற்றோர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம், பூங்குளம் பகுதியில் ஒரு கிறிஸ்வத கான்வென்ட் உள்ளது. இங்கு மேரி ஆன்சி என்ற கன்னியாஸ்திரி தங்கியிருந்தார்.
கடந்த வாரம் கான்வென்ட் தண்ணீர் தொட்டியில் இவர் பிணமாகக் கிடந்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி கான்வென்ட் நிர்வாகிகள் கூறுகையில், கன்னியாஸ்திரி மேரி ஆன்சி தோல் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தனர்.
இதற்கு மேரி ஆன்சியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். மேரி ஆன்சி தற்கொலை செய்யவில்லை. அவரை கொலை செய்து பிணத்தை தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளனர் என்றனர். இது பற்றி கன்னியாஸ்திரியின் தந்தை பிலிப் மாத்யூ தென்மண்டல ஐஜி பத்மகுமார், திருவனந்தபுரம் உதவி கமிஷனர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
கன்னியாஸ்திரி மேரி ஆன்சியை 2 நாட்களுக்கு முன்பு அவரது சகோதரர் பார்த்து பேசியுள்ளார். அப்போது மேரி ஆன்சி சந்தோஷமாக காணப்பட்டார். தனக்கு தோல் நோய் இருப்பதாகவும் கூறவில்லை. ஆனால் கான்வென்ட் நிர்வாகிகள் வேண்டும் என்றே அவர் தற்கொலை செய்ததாக கூறுகிறார்கள்.
மேரி ஆன்சி சுமார் 45 கிலோ எடையுள்ள தண்ணீர் தொட்டியின் மூடியை தனி ஆளாக திறந்து அதற்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கான்வென்ட் நிர்வாகிகள் கூறுவதை நம்ப முடியவில்லை. அவரை யாரோ கொலை செய்து பிணத்தை தொட்டியில் போட்டுள்ளனர். எனவே, போலீசார் தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications