தேர்தல் சீர்திருத்தத்திற்காக அடுத்து களம் குதிக்கிறார் அன்னா ஹஸாரே

கடந்த 12 நாட்களாக வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து உண்ணாவிரதம் இருந்து வந்த அன்னா ஹஸாரே, இன்று காலையில் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து ஆதரவாளர்களிடையே அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த வெற்றி எனக்கோ எனது குழுவினருக்கோ கிடைத்த வெற்றியல்ல. மாறாக ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்த வெற்றி. உலகுக்கே இந்த வெற்றி ஒரு முன்னோடியாக அமைந்துள்ளது.
நாம் பாதிப் போராட்டத்தைத்தான் வென்றுள்ளோம். நமது பணி இன்னும் முடியவில்லை. வலுவான லோக்பால் அமைந்ததும் நமது பணி முடிந்து விட்டதாக கூறி அமைதியாக இருக்கக் கூடாது. தொடர்ந்து ஊழலுக்கு எதிராக நாம் தீவிரமாக போராட வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள், நாட்டு மக்கள், ஆதரவு கொடுத்த மீடியாக்கள் என அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தை விட மக்கள் சக்தியே மிகப் பெரியது. அதை நமக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் என்றார் அன்னா.
மேலும் அவர் கூறுகையில், இந்தப் போராட்டம் ஒரு தொடக்கம்தான். தேர்தல் சீர்திருத்தம், கல்வி முறையில் மாற்றங்கள் உள்பட பல துறைகளை நாம் சீர்திருத்த வேண்டியுள்ளது.
தவறிழைக்கும் எம்.பிக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறவும், மக்கள் நிராகரிக்கவும் மக்களுக்கு உரிமை தரப்பட வேண்டும். அதற்காக நாம் போராட வேண்டும் என்றார் அன்னா.
இதன் மூலம் அடுத்து தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக அன்னா ஹஸாரேவும், அவரது குழுவினரும் விரைவில் புதிய போராட்டத்தை அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications