தூக்கு தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்பு அதிகம்: சீமான்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டதாலேயே அவர்களின் வாழ்க்கைக்கு முடிவு நிர்ணயிக்கப்பட்டது என்று கருதவேண்டியதில்லை.
இப்போது இந்த மூன்று பேரும் தங்களுடைய கருணை மனுக்களை 11 ஆண்டுகள் தாமதித்து நிராகரித்திருப்பது அரசமைப்பு சட்ட ரீதியாக நியாயமற்றது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளனர்.
இப்படி கருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் வைத்து நிராகரித்த மரண தண்டனை குற்றவாளிகள் ஏற்கனவே தொடர்ந்த வழக்குகளில், அவர்களின் தண்டனையைக் குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இந்த மூவர் 11 வருடங்கள், 4 மாதங்கள் கருணை மனு முடிவிற்காக காத்திருந்துள்ளனர்.
அப்படிப்பட்ட சூழலில் மிக மிக கால தாமதமாக அவர்களுடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், அவர்களுடைய மரண தண்டனை, ரத்து செய்யப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே விரைவில் மூவருக்கும் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள வழக்குகளில் நமக்கு உரிய நீதி கிடைக்கும். நமது குரலுக்கு உரிய நியாயம் கிட்டும். நாம் சோர்ந்து போகவோ, துவண்டுவிடவோ தேவையில்லை.
இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications