கன்னியாகுமரி காங்கிரஸ் அலுவலகத்திற்கு காங்கிரசாரே பூட்டு போட்ட வினோதம்: போலீசார் குவிப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ராபர்ட் புரூஸ் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி அலுவலகத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகளே பூட்டு போட்ட சம்பவம் நடந்தது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயபால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.
இந்த இடத்திற்கு புதிய தலைவர் இதுவரை நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி. தங்கபாலுவின் தீவிர ஆதரவாளரான ராபர்ட் புரூஸ் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை பொருட்படுத்தாத ராபர்ட் புரூஸ் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனால் ஆவேசம் அடைந்த இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.டி. உதயம் தலைமையில் வந்த காங்கிரசார் ராபர்ட் புரூஸ் அறையைப் பூட்டி, மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அவர் அறையின் உள்ளே தவியாய் தவித்துப் போனார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், தங்கபாலு நியமனம் செய்தவரை தலைவராக ஏற்க முடியாது என்று போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் விரைந்து வந்து பூட்டை உடைத்து ராபர்ட் புரூசை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
மேலும், மோதல் ஏற்படாமல் இருக்க காங்கிரஸ் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications