ஜெயலலிதா நினைத்தால் தூக்கு தண்டனை ரத்து செய்யலாம்: வழக்கறிஞர் புகழேந்தி
சென்னை: பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் ரத்து செய்ய முடியும். அதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறது என்று அந்த 3 பேரின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு வரும் 9-ம் தேதி தூக்கு தண்டைனை நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வேலூர் சிறையில் நடைபெற்று வருகிறது.
அந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வேலூர் சிறையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறை வாசலில் ஆயதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறை சுப்பிரண்டு மூலமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பியுள்ளனர். இது தவிர அவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி அவர்கள் சார்பில் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியதாவது,
தூக்கு தண்டனையை எதிர்நோக்கியருக்கும் அந்த 3 பேரும் தங்கள் உயிரைக் காப்பாற்ற முதல்வர் ஜெயலலிதாவை தான் நம்பியுள்ளனர். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகும் கூட, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
அதன்படி முதல்வர் ஜெயலலிதா தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.
இதற்கு முன்பு குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த பிறகும் கூட மாநில அரசுகள் தூக்கு தண்டனையை ரத்து செய்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாலன் என்பவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவரது தூக்கு தண்டனையை மாநில அரசு ஆயுள் தண்டனையாக குறைத்தது. அப்போது வி.ஆர்.கிருஷ்ண அய்யர் சட்ட அமைச்சராக இருந்தார்.
பேரறிவாளன், முருகன், சாந்தனின் அனுப்பி வைத்த மனு மீது அரசு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியாததால் அவர்கள் தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்.
தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிப்பதுடன், அதை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோருவோம். 3 பேரின் கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவர் நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டதையே காரணமாகக் கூறி கோரிக்கை விடுப்போம்.
குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரிக்க 2 ஆண்டுகளுக்கு மேல் கால அவகாசம் எடு்ததால் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை குறைத்ததற்கு முன் உதாரணங்கள் உள்ளன.
கடந்த 1965-ம் ஆண்டு அப்போதைய பஞ்சாப் முதல்வரை கொலை செய்த வழக்கில் தயா சிங்கிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கருணை மனு இரண்டறை ஆண்டுகள் கழித்து நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
மேலும், நீண்ட காலத்திற்கு பிறகு கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஒருவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சமீபத்தில் கவுகாத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
ஆகையால், இந்த 3 பேரின் தூக்கு தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் உள்ளது. 3 பேரும் நாளை மனு தாக்கல் செய்தால் சிறை அதிகாரிகள் அவர்களின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. வழக்கு நிலுவையில் உள்ளபோது தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications