அடுத்தவர் பெயரில் கடன் மோசடி: அதிமுக பெண் நிர்வாகி, கணவருக்கு வலைவீச்சு
பணகுடி: அடுத்தவர் பெயரில் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த அதிமுக பெண் நிர்வாகி மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அழகியநம்பிபுரத்தைச் சேர்ந்த அரசரத்தினம் மனைவி எஸ்கலின்மேரி. அதிமுக மாவட்ட மகளிரணி இணை செயலாளர். அவர் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியில் கடன் வாங்கிக் கொடுத்து வந்தார். அவரிடம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பல பெண்களும், ஆண்களும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கித் தரும்படி கூறினர்.
அவர்களிடம் வங்கியில் கடன் வாங்கிக் கொடுப்பதற்காக அதற்குரிய ஆவணங்களை நிரப்பி அதில் கையெழுத்து வாங்கினார் எஸ்கலின்மேரி. அவர்களிடம் நிச்சயம் கடன் வாங்கித் தருவதாக உறுதியளித்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் யாருக்கும் கடன் வாங்கித் தரவில்லை.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணகுடி சிவலிங்க நாடார் காம்பவுண்டைச் சேர்ந்த ஞானபிரகாசம் மகன ஜெகன் பெயருக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. அதில் நீங்கள் எங்களிடம் வாங்கிய ரூ.2 லட்சத்திற்கு இது நாள் வரை தவணை கட்டவில்லை. உடனடியாக வட்டியும், அசலும் கட்டாவிட்டால் உங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தான் கையெழுத்திட்ட விண்ணப்பம் மூலம் வங்கிக் கடன் வாங்கி தனக்கு தராமல் எஸ்கலின் மேரி ஏமாற்றிவிட்டார் என்பதை உணர்ந்த ஜெகன் பணகுடி போலீசில் புகார் செய்தார். இதை அறிந்த எஸ்கலின் மேரி தனது கணவருடன் சென்று எப்படி எங்கள் மீது போலீசில் புகார் கொடுக்கலாம் என கேட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதில் மனமுடைந்த ஜெகன் நேற்று விஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பணகுடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரசலையன் விசாரணை நடத்தி எஸ்கலின் மேரி மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளார். தலைமறைவாகியுள்ள எஸ்கலின் மேரியையும், அவரது கணவரையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications