பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும்: ராமகோபாலன்
புதுவை: பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேணடும் என்று இந்து முன்னணி தலைவர் ராமகோபாலான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுவையில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புதுவையில் வரதராஜ பெருமாள் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், திருக்காமீஸ்வரர் கோவில், கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் ஆகியவற்றை அரசு புனரமைத்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
அதே போல காந்தி வீதியில் உள்ள பெருமாள் கோவில், அண்ணா சாலையில் உள்ள அம்மன் கோவில் உள்ளிட்ட சிதிலமடைந்த கோவில்களையும் புதுப்பித்து பராமரிக்க வேண்டும்.
தொழிலாளர்கள் என்ற போர்வையில் நக்சலைட்டுகள் புதுவையில் கால் பதித்து வருகின்றனர். இவர்கள் தொழிலாளர் இயக்கங்களுக்குள் நுழைந்து பொது மக்களிடம் பகிரங்கமாக பணம் பறித்து வருகின்றனர். இதை உடனே தடுக்காவிட்டால் புதுவையின் எதிர்காலத்துக்கு ஆபத்து நேரிடும். எனவே, இதனை ஆரம்ப நிலையிலேயே அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
ரம்ஜானை முன்னிட்டு புதுவை ஆளுநர் முஸ்லீம்களை அழைத்து விருந்து கொடுத்துள்ளார். இது மதசார்பின்மைக்கு எதிரான செயல். இப்படி சிறுபான்மையினரை தாஜா செய்வது நடுநிலை பதவியில் இருப்பவருக்கு அழகல்ல.
இது போல மலையாளிகள், தெலுங்கர்கள், புத்த மதத்தினர் போன்ற சிறுபான்மையினருக்கு மரியாதை அளிக்கப்படாதது ஏன்?
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன்,முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை செயல்படுத்தினால் தான் எதிர்காலத்தில் இது போன்ற கொடுஞ்செயல்களை மற்றவர்கள் செய்ய பயப்படுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications