அதிகரித்து வரும் வருமானத்தால் பாரீன் டூர் போகும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

மும்பையில் ஒரு மாலை நேரத்தை செலவிட ஆகும் தொகையை விட பிராக், ஆக்லாந்து, பெய்ஜிங் ஆகிய நகரங்களில் குறைவான செலவே பிடிக்குமாம். உலகின் முன்னணி சுற்றுலா இணையதளமான டிரிப்அட்வைசர் இதைத் தெரிவிக்கிறது.
இந்தியர்களைப் பொறுத்தவரை எந்தெந்த நகரங்கள் அதிக செலவான நகரங்கள் என்ற பட்டியலை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள நகரங்களில் 13வது இடத்தைப் பிடித்துள்ளது மும்பை. இந்தியர்களுக்கு அதிக செலவான நகரமாக விளங்குவது பாரீஸ்தான். அடுத்து ஜூரிச், டோக்கியோ, லண்டன், நியூயார்க் ஆகியவை வருகின்றன.
மும்பையில் ஒரு 4 ஸ்டார் ஹோட்டலில் தங்கி, எட்டு கிலோமீட்டருக்கு டாக்சியில் சுற்றி, ஒரு நேரம் மதுவுடன் சாப்பிட ஆகும் செலவு ரூ. 8500 ஆகும். இதுவே ஆக்லாந்தில் செலவுத் தொகை ரூ. 6500 ஆகவும், பாரீஸில் ரூ. 19,000 ஆகவும் இருக்கிறது.
இந்தியாவில் அதிக செலவில்லாத நகரம் ஜெய்ப்பூர். அங்கு ஒரு சுற்றுலாப் பயணிக்கு ஒரு நாளைக்கு ஆகும் செலவு ரூ. 3933 ஆகும். ஆக்ரா, சிம்லா, டார்ஜீலிங், கோவாவில் ரூ. 6740 ஆக இது உள்ளது.
நடுத்தர வர்க்கத்தினரிடையே தற்போது வருமானம் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டை விட்டு வெளியே சென்று சுற்றிப் பார்க்கும் ஆர்வம் அவர்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூருக்கு் செல்ல அவர்கள் விரும்புகின்றனர்.
உலக அளவில் இன்னும் அகலாத பொருளாதார நெருக்கடி இந்திய நடுத்தர வர்க்கத்தினரை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 1 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றனர்.இந்த ஆண்டு மேலும் 20 லட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications