புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம் பணம், செல்போன் கொள்ளை!
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமியின் பணம், செல்போனை யாரோ கொள்ளையடித்துவிட்டனர்.
டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரில் பங்கேற்று வருகிறார். இவர் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்கியுள்ளார்.
அவருடன் அவரது மகனும் தங்கி இருக்கிறார். இன்று காலையில் டாக்டர் கிருஷ்ணசாமி நடைபயிற்சி மேற்கொள்வதற்காக வெளியில் சென்றிருந்தார். அறையில் அவரது மகன் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் யாரோ கிருஷ்ணசாமியின் அறையில் புகுந்து, அவரது சூட்கேஸ் மற்றும் செல்போனை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். நடைபயிற்சி முடிந்து திரும்பி வந்து பார்த்த கிருஷ்ணசாமி சூட்கேசையும், செல்போனையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அரசினர் தோட்டம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சூட்கேசில், ரூ. 75 ஆயிரம் பணமும், சட்டசபையில் பேச வேண்டிய குறிப்புகளும் இருந்ததாக கிருஷ்ணசாமி புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications