பேரறிவாளன், முருகன், சாந்தனை காப்பாற்றுங்கள்: ஜெ.வுக்கு தமிழ் மாநில முஸ்லீம் லீக் கோரிக்கை
மதுரை: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் உயிரைக் காப்பாற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் எஸ். ஷேக் தாவூத் வேண்டுகோள் வி்டுத்துள்ளார்.
இது குறித்து தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் எஸ்.ஷேக் தாவூத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வரும் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த உத்தரவு மிகுந்த மனவேதனையையும், மன உளைச்சலையும் தரக்கூடியதாக உள்ளது.
தமிழகத்திலுள்ள தமிழர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் கவலையோடு எதிர்நோக்குகின்ற நிகழ்வாக இது உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதுவே அவர்களுக்கு பெரிய தண்டனையாகும்.
இலங்கையில் பல லட்சம் தமிழினம் அழிந்த நிலையில், இந்த மூன்று பேரின் தூக்கு தண்டனையை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையில் ராஜீவ் காந்தி குடும்ப உறுப்பினர்களே மன்னித்துவிட்ட நிலையில் கொலைக்கு கொலை பரிகாரமாகாது என்ற அடிப்படையிலும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் உயிரைக் காப்பாற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications