கணவர், மாமனாரை பழிவாங்க சொத்தை மோசடியாக விற்ற பெண்: 3 பேர் கைது
சென்னை: கணவர் மற்றும் மாமனார் மீது கோபம் கொண்ட பெண், வீட்டில் இருந்த சொத்துப் பத்திரத்தை எடுத்து மோசடியாக விற்று விட்டுத் தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீஸார் அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் மீரா மங்குந்தா (65). அவரது கணவர் சுதாகர். கனடாவில் பொறியாளராக பணிபுரிந்தார். உத்தண்டியில் மீராவுக்கு சொந்தமாக வீட்டுமனை உள்ளது. அதன் மதிப்பு ரூ. 75 லட்சம்.
கனடாவில் இருந்து வந்த சுதாகர் சென்னையிலேயே வியாபாரம் செய்ய முடிவு செய்தார். வியாபாரம் துவங்க போதிய பணம் இல்லாததால் அவர் தி. நகரில் உள்ள நண்பர் தர்மலிங்கத்திடம் மீராவின் வீட்டுமனையை அடமானம் வைத்து ரூ. 5 லட்சம் பெற்றார். வீட்டுமனையின் மூலப்பத்திரத்தையும் தர்மலிங்கத்திடம் கொடுத்தார்.
அதன் பிறகு தர்மலிங்கம் உடல் நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இந்நிலையில் அவரது மகன் ரமேஷ்பாபுவுக்கும், மருமகள் பரிமளாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே கணவனையும், மாமனாரையும் பழிவாங்க நினைத்தார் பரிமளா. வீட்டு பீரோவில் இருந்த உத்தண்டி வீட்டுமனை பத்திரத்தை திருடினார்.
இது பற்றி அவர் கார் டிரைவர் சிவக்குமாரிடம் (39) கூற, அவரோ பரிமளாவை கையோடு அழைத்துக் கொண்டு போய் ரியல் எஸ்டேட் புரோக்கர் ராமன் (58) என்பவரிடம் அறிமுகப்படுத்தினார்.
ராமன் மந்தைவெளியைச் சேர்ந்த சித்ரா (51) என்பவருக்கு ரூ. 15 ஆயிரம் கொடுத்து அவரை மீராவாக ஆள்மாறாட்டம் செய்ய வைத்து கடந்த ஜனவரி மாதம் சைதாப்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். அங்கு பரிமளா, ராமன், சிவக்குமார் ஆகியோர் சேர்ந்து உத்தண்டி வீட்டு மனையை சுப்புராஜ் என்பவருக்கு ரூ.17 லட்சத்திற்கு விற்றனர்.
இதற்கிடையே மீரா தான் வாங்கிய பணத்தை வட்டியுடன் கொடுத்துவிட்டு வீட்டுமனை பத்திரத்தை திருப்பிக் கேட்டார். தர்மலிங்கம் பத்திரத்தைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் சந்தேகம் அடைந்த மீரா தனது வீட்டுமனை விற்கப்பட்டதை கண்டுபிடித்தார். இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் சிவக்குமார், ராமன், சித்ரா ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். பரிமளா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications