திருப்பூரில் நில மோசடி செய்த வழக்கில் மதுரை மேயரின் கணவர் கைது
மதுரை: திருப்பூரில் நடந்த நில அபகரிப்பு மோசடிப் புகார் தொடர்பாக மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதனை திருப்பூர் போலீஸார் கைது செய்து திருப்பூருக்குக் கொண்டு சென்றுள்ளன்ர.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியம், மகாலிங்கம். இவர்களுக்கு அப்பகுதியில் 55.3 ஏக்கர் நிலம் இருந்தது.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் குமார் ஆகியோர் இந்த நிலத்தைப் பார்த்து வாங்க தீர்மானித்தனர். இதையடுத்து ஏக்கருக்கு ரூ. 8.2 லட்சம் என்று பேசி மொத்தம் ரூ. 4.53 கோடிக்கு நிலத்தை வாங்க பேச்சு முடிவானது.
அதன் பின்னர் அட்வான்ஸ் தொகையாக ரூ. 1.3 கோடியை ஈஸ்வரன், குமார் கொடுத்தனர். 3 மாதத்தில் மீதத் தொகையை தருவதாக கூறி ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும், 2006 டிசம்பர் 30ம் தேதி கிரையம் செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இருப்பினும் இதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை வந்த அவர்கள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு நெருக்கமான கோபிநாதனை சந்தித்தனர். இவர் மதுரை மேயர் தேன்மொழியின் கணவர்.
இதையடுத்து கோபிநாதன், தனது மருமகன் ரமேஷ், குருசாமி, அவிநாசி திமுக செயலாளர் சாமிநாதன் ஆகியோருடன் திருப்பூரில் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு பஞ்சாயத்துப் பேசியுள்ளார். பஞ்சாயத்தின் இறுதியில், மகாலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரிடம் இருந்து அந்த நிலத்தை ஈஸ்வரன், குமார் ஆகியோரது பெயருக்கு எழுதி வாங்கிக் கொடுத்துள்ளார். அதேசமயம், நிலத்தின் உண்மையான மதிப்புத் தொகையான ரூ. 5 கோடியை தர மறுத்து விட்டனர். அதாவது அடிமாட்டு விலைக்கு இந்த நிலத்தை வாங்கி விட்டனர்.
அதிர்ச்சி அடைந்த மகாலிங்கமும், சுப்பிரமணியமும் திருப்பூர் போலீஸில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேற்று கோபிநாதனைக் கைது செய்தனர். மற்றவர்களையும் விரைவில் போலீஸார் கைது செய்யவுள்ளனர்.












Click it and Unblock the Notifications