உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
கரூர்: 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகளை உடனே இடமாற்றம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம், மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் பல ஊழியர்கள் சொந்த ஊர்களிலேயே பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
இதனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிய அலுவலர்களையும், ஊழியர்களியும் வரும் 5ம் தேதிக்குள் இடமாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பேருராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலை பேரூராட்சி செயல் அலுவலரும், பஞ்சாயத்து தலைவர்கள் தேர்தலை பேரூராட்சி துணை செயல் அலுவலரும் நடத்துவர். தற்போது பணியில் உள்ள அலுவலர்கள் தற்போது பதவியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உள்ளதால் இந்த அவசர இடமாற்ற உத்தரவை தேர்தல் ஆணையம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.