மத்திய அரசுக்கு மூக்கறுப்பு-பிரதமருடனான வங்கதேசப் பயணத்தை ரத்து செய்தார் மம்தா
கொல்கத்தா: பிரதமர் மன்மோகன் சிங்குடன் வங்கதேசம் செல்ல இருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் நாளை இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் செல்கிறார். அவருடன், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் செல்வதாக இருந்தது.
இந் நிலையில், இந்தியா- வங்கதேசம் இடையிலான தீஸ்தா நதி நீர் விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சமீபத்தில் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். அப்போது, தீஸ்தா நதியில் வங்கதேசத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மேனன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த முடிவு மேற்கு வங்க மாநிலத்துக்கு பாதகமானது என்பதால், இந்தத் திட்டத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பிரதமருடனான தனது வங்கதேசப் பயணத்தை மம்தா திடீரென ரத்து செய்துவிட்டார்.
கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய மம்தா, நான் பிரதமருடன் வங்கதேசம் செல்லவில்லை என்றார். ஆனால், அதற்கான காரணத்தை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே டாக்காவில் வங்காள தேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினாவை மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுகிறார். அப்போது வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங், மோங்லா ஆகிய துறைமுகங்களை இந்தியா பயன்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்துகின்றனர்.
மேலும், வங்காள தேசத்துக்கு இந்தியா ரூ.3,700 கோடி கடன் வழங்கவுள்ளது.
இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் 2 நாட்கள் வங்காள தேசத்துக்கு சென்று அந்த நாட்டு அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதன் பின் மன்மோகன் சிங்- ஷேக் ஹசினா கையெழுத்திட வேண்டிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.
மன்மோகன் சிங்கின் வருகையையொட்டி, இந்திய பாதுகாப்பு அதிகாரிகளும் வங்காள தேசம் சென்று, அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு நடத்தினார்கள்.












Click it and Unblock the Notifications