கர்நாடக- ஆந்திர எல்லையில் ரெட்டி சகோதரர்கள் அடித்த மானாவாரி சுரங்கக் கொள்ளை!
டெல்லி: சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்காக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து கர்நாடக, ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் இஷ்டம் போல சுரங்கக் கொள்ளையில் ஈடுபட்டனர் ரெட்டி சகோதரர்கள் என்பது சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கர்நாடக, ஆந்திர மாநில எல்லையில்தான் ரெட்டி சகோதரர்களின் ஓபுலாபுரம் சுரங்கக் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியின் ஓனர் ஜனார்த்தன ரெட்டி. இதன் நிர்வாக இயக்குநராக இருப்பவர் இவரது மச்சான் ஸ்ரீனிவாச ரெட்டி.
இந்த சுரங்க நிறுவனம் மூலம் மிகப் பெரிய அளவில் கொள்ளையடித்து வந்துள்ளனர் ரெட்டி சகோதரர்கள். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைத் தவிர சுத்துப்பட்டில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் வளைத்துப் போட்டி வாரிச்சுருட்டியுள்ளது இந்தக் கும்பல். செயற்கைக் கோள் படம் மூலம் இதைக் கண்டுபிடித்துள்ளது சிபிஐ.
இங்கு நடந்து வந்த சுரங்கத் தொழிலில் அரங்கேறிய மோசடிகள் சிபிஐ மூர்ச்சை அடைய வைக்கும் அளவுக்கு உள்ளன.
ஓபுலாபுரம் சுரங்கத்தில் மட்டும்தான் இரும்புத் தாது வெட்டி எடுக்கப்படுவதாக இந்த நிறுவனத்தினர் கூறுகின்றனர். ஆனால் சிபிஐ விசாரணையில், கர்நாடக, ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள சட்டவிரோத சுரங்கங்களிலிருந்துதான் பெருமளவில் இரும்புத் தாதுகளை எடுத்துக் கடத்தி வந்துள்ளனர்.
செயற்கைக்கோள் படங்கள் மூலம் இது தெரிய வந்துள்ளது. பிற சுரங்கங்களிலிருந்து தாத்துக்களை வெட்டி எடுத்து அதை ஓபுலாபுரம் நிறுவனத்திற்கு அனுப்பி போலியான கணக்கு காட்டி மோசடி செய்து வந்துள்ளது ரெட்டிகளின் நிறுவனம்.
ஓபுலாபுரம் சுரங்கங்கள் ஆந்திர மாநிலம் ஆனந்தப்பூர் மாவட்டத்தின் கீழ் வருகிறது. ஆனால் அதன் தலைமையகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரியில் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஜனார்த்தன ரெட்டி தவிர, அவரது சகோதரர்கள் கருணாகர ரெட்டி மற்றும் சோமசேகர ரெட்டி ஆகியோரும் புரமோட்டர்களாக உள்ளனர்.
இவர்களில் ஜனார்த்தன ரெட்டியையும், அவரது மச்சான் ஸ்ரீனிவாச ரெட்டியையும் மட்டும் சிபிஐ இதுவரை கைது செய்துள்ளது.
ரெட்டிகளுக்கு 25.9 ஹெக்டேர் பரப்பளவுக்கு மட்டுமே வெட்டி எடுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை விட பல மடங்கு ஹெக்டேர் அளவிலான பகுதிகளில் அவர்கள் இரும்புத் தாதுவை எடுத்து வந்துள்ளனர்.
மேலும் சட்டவிரோதமாக தாதுவை வெட்டிஎடுக்க அவர்கள் பெல்லாரி காப்புக் காடுகளிலும் கூட கை வைத்து வாரிச் சுருட்டியுள்ளனர். இந்தக் காடு, ஆந்திராவின் ஆனந்தப்பூர் மாவட்டம் மற்றும் கர்நாடகத்தின் பெல்லாரி மாவட்டங்களின் கீழ் வருகிறது.
இரு மாநில எல்லைகளையும் இவர்கள் மானாவாரியாக மாற்றியமைத்து தாறுமாறாக தாதுவை சட்டவிரோதமாக வெட்டி எடுத்துள்ளனர். தங்களது சட்டவிரோத சுரங்கத்திற்காக, எல்லைப் பகுதியில் இருந்த பிரபலமான சுகுலம்மா தேவி கோவிலையும் கூட இவர்கள் வெடி வைத்துத் தகர்த்து விட்டனர்.












Click it and Unblock the Notifications