நிலத்தை அபகரித்து அதிமுக நிர்வாகி மிரட்டுகிறார்: தம்பதி புகார்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் ரமேஷ் நிலம் மற்றும் வீட்டை அபகரித்துக் கொண்டு மிரட்டுவதாக மாவட்ட நில அபகரிப்பு தனிப்பிரிவு போலீசாரிடம் ஒரு தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி புதூர் பாரதி நகர் 4-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.
இவர் தனது மனைவி கவிதாவுடன் தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு தனிப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
எனது சொந்த ஊர் ஏரல். நான் தற்போது திருச்சியில் வசித்து வருகிறேன். ஏரல் பேரூராட்சி துணை தலைவரும், அதிமுக மாவட்ட ஜெ பேரவை துணை செயலாளருமான ரமேஷ் என்பவர் என்னுடன் பள்ளியில் படித்தவர். நான் அவர் மூலம் ஏரல் டவுன் பஞ்சாயத்தில் 9.5 சென்ட் நிலத்தை வாங்கினேன். எனது பெயரில் வாங்கினால் அதிக விலை கேட்பார்கள் என்று ரமேஷ் கூறியதால் அவரது பெயரிலேயே அந்த நிலத்தை ரூ.13.20 லட்சத்திற்கு கிரையம் முடித்தேன். பின்னர் ரமேஷிடம் தெரிவித்துவிட்டு அந்த நிலத்தில் வீடு கட்டினேன்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தனக்கு எம்எல்ஏ சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இதற்கு செலவு செய்ய பணம் தருமாறும் என்னிடம் கேட்டார். 5 தவணைகளில் நான் ரூ. 35 லட்சம் கொடுத்தேன். பின்னர் அவர் கூறியது போலவே அந்த நிலத்தையும், வீ்ட்டையும் என் பெயருக்கு கிரையம் செய்து கேட்டபோது தேர்தலை காரணம் காட்டி காலம் தாழ்த்தினார். நான் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் நிலம் மற்றும வீ்ட்டிற்கு ஆதாரிட்டியாக பின் தேதியிட்ட ரூ.5 லட்சம் வீதம் 4 காசோலைகளை கொடுத்தார்.
அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த நாங்கள் இதுகுறித்து கேட்டபோது அடியாட்களை வைத்து மிரட்டினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதி்முக நிர்வாகி மீது நிலமோசடி புகார் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications