பரமக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு வைகோ கண்டனம்: தென் மாவட்ட மக்கள் அமைதி காக்க வேண்டுகோள்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிர் இழந்தனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், கவலையும் தருகிறது.
துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன் இது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் மதுரை துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றவர்கள் பூரண சுகம் அடையும் வகையில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதோடு, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மதிமுக சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்துவதும், அமைதியைச் சீர்குலைப்பதும் எந்த விதத்திலும் ஏற்கத் தக்கதல்ல. அந்தச் செயல்கள் பொது அமைதிக்கு பெரும் கேடாகவே அமையும். எனவே, ஆத்திரத்திற்கு ஆட்பட்டு எத்தகைய செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.
தென் மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் சமூக ஒற்றுமையைப் பாதுகாக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் உள்ளிட்ட அனைவரின் நலன் கருதி அமைதி காக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications