Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவச லேப்டாப், ஆடு-மாடு, மிக்ஸி-கிரைண்டர் திட்டம்: எம்ஜிஆர் பாட்டு பாடி தொடங்கி வைத்த ஜெ!

Subscribe to Oneindia Tamil

Cow Skin Laptop
திருவள்ளூர்: அறிஞர் அண்ணாவின் 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், கிராம மக்களுக்கு ஆடு,மாடுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் இந்தத் திட்டங்களைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா பேசுகையில், இன்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 103 வது பிறந்த நாள்.

''இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்,
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்,
அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்,
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்'' என்று, பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை அனுதினமும் கடைபிடித்து, நல்லாட்சி நடத்தி, ஏழை, எளிய மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற, பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில்,

ஏழை, எளிய மக்களின் வளமான வாழ்விற்காக, நித்தம் நித்தம் புத்தம் புது திட்டங்களைத் தீட்டும் உங்கள் அன்புச் சகோதரி ஆகிய நான் பல்வேறு புதிய திட்டங்களை இன்று இந்த விழாவில் தொடங்கி வைப்பதில் உள்ளபடியே பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நான் மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றே, மக்கள் நலன் பயக்கும் மகத்தான ஏழு திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டேன். மேலும், ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட உங்கள் அன்புச் சகோதரி ஆகிய நான் உறுதி பூண்டுள்ளேன்.

என் அன்பிற்கினிய தமிழக மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம், தினம் ஒரு திட்டத்தைத் தீட்டி செயல்படுத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், உங்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு, இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், மாணவ, மாணவியர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் லேப்டாப் வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வில் பொருளாதார மறுமலர்ச்சியை உருவாக்கும் வகையில் ஆடுகள் வழங்கும் திட்டம், வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில், பால் உற்பத்தியைப் பெருக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகிய முன்னோடித் திட்டங்களை இன்று இந்த இனிய விழாவில் தொடங்கி வைக்க உள்ளேன்.

இன்று, மக்களுக்குப் பயன்படும் வகையில் இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை, 'இலவசம்" என்று ஒரு சிலர் கொச்சைப்படுத்துகின்றனர். வாக்களித்த மக்களுக்கு, இவ்வாறு வழங்கப்படுகின்றது என்றும், இவை இலவசங்கள் என்றும், எனவே, இவ்வாறு வழங்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்திற்கே சென்று கூட வழக்கு தொடுத்துள்ளனர்.

ஏழை, எளிய மக்கள் வாழ்வில் வளம் பெறவும், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டியும், மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று, தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்பதற்கு வழி வகை செய்யும் இந்தத் திட்டங்களை எல்லாம் இலவசத் திட்டங்கள் என்று கொச்சைப்படுத்துவதை பொருளாதாரம் தெரிந்த எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இன்று துவக்கி வைக்கப்படும் கறவை மாடுகள் வழங்கும் திட்டம், மக்கள் வாழ்வில் ஏற்றம் அளிக்கும் ஒரு உன்னதத் திட்டம் ஆகும். இது குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டு ஒன்றுக்கு 12,000 ஏழைப் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் 60,000 பயனாளிகளுக்கு கறவைப் பசுக்கள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் கலப்பின ஜெர்சி பசுக்கள் வழங்கப்படுவதால், அதிக பால் உற்பத்தித் திறன் ஏற்பட இது வழி வகை செய்கிறது. இவ்வாறாக, மாநிலத்தில் பால் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்குவதால், இந்தத் திட்டம் வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் ஒரு உன்னதத் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் 30 சதவீத பயனாளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள இந்தத் திட்டம் வழி வகை காண்கிறது.

''சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போல வைத்து உன்னைக் காப்பது என் பாடு"' என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடியபடி, பயனாளிகள், இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் கறவைப் பசுக்களை பாதுகாத்து, அதன் மூலம் தங்கள் வாழ்வில் வளம் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதே போன்று தான், ஏழைகளின் வாழ்வில் ஏற்றத்தை உருவாக்கும் மற்றொரு திட்டம் ஆடுகள் வழங்கும் திட்டம் ஆகும். ஏழ்மையிலும் ஏழ்மையாக உள்ளவர்களே இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தத் திட்டத்திலும் 30 சதவீத பயனாளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராக இருப்பர். ஏழ்மையிலும் ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகள் தங்கள் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டு, பொருளாதார சுதந்திரம் அடைந்திட இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. இந்தத் திட்டத்தின் பயனாளிகள், ஒன்று, இரண்டு ஆண்டுகளிலேயே, தமது சொந்தக் கால்களில் நிற்கும் பொருளாதார வலிமையை இந்தத் திட்டம் பெற்றுத் தந்திடும்.

மாணவ, மாணவியர் உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையிலும், மேல்நிலைப் பள்ளிகளில் இடை நிற்றலைத் தடுக்கும் பொருட்டும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 1,500 ரூபாயும், மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு 1,500 ரூபாயும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு 2,000 ரூபாயும், ஊக்கத் தொகையாக வழங்கும் திட்டத்தையும் இன்று தொடங்கி வைக்கிறேன்.

அறிவுசார் மாணவ சமுதாயத்தை உருவாக்கும் ஒரு புரட்சிகரமான, இந்தியாவிற்கே வழி காட்டும் முன்னோடித் திட்டம், மடிக் கணினி வழங்கும் திட்டம் ஆகும். மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக் கணினி அவர்களை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் தலை வாசலாக அமையும். தமிழ்நாட்டு மாணவ, மாணவியர் மற்ற எந்த மாநில மாணாக்கர்களையும் விட, கல்வியில் தேர்ந்து, அறிவில் சிறந்து விளங்கிட இந்தத் திட்டம் பயன் அளிக்கும்.

இல்லத்தரசிகளின் இன்னல் தீர்க்கும் இன்னொரு முத்தான திட்டம் தான், மகளிருக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தையும் இன்று நான் தொடங்கி வைக்கிறேன். இன்று நான் வழங்கும் மிக்ஸி மற்றும் கிரைண்டர், சமையல் அறையில் நாளும் உழன்று கொண்டிருக்கும் இல்லத்தரசிகளின் வேலைப் பளுவையும், நேரத்தையும் வெகுவாகக் குறைக்கும். இந்த அரிய நேரத்தை, ஆக்கபூர்வமான வழிகளில், அதாவது, குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலோ, அல்லது தம் உள்ளத்தை செழுமைப்படுத்தும் நடவடிக்கைகளிலோ, அல்லது சமுதாயத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலோ இல்லத்தரசிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும். அது போலவே, வசதி பெற்றவர்கள் குளிர்சாதன வசதியை ஏற்படுத்திக் கொள்ளும் போது, அந்த வசதியைப் பெற இயலாத சாமானிய மக்கள் மின் விசிறி வசதியைப் பெறுவது நியாயமானதே ஆகும்.

உங்கள் அன்புச் சகோதரி ஆகிய எனது தலைமையிலான அரசு, பொருளாதார வளர்ச்சிக்கும், மனிதவள மேம்பாட்டிற்கும், தனி மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுக்கும் என பலப் பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. நீங்கள் அனைவரும் இந்தத் திட்டங்களின் பயன்களைப் பெற்று, உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும் என்றார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+