ஆக்ரா மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 15 பேர் காயம்- உஷார் நிலையில் உபி
லக்னோ: ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குண்டுவெடித்ததில் 15 பேர் காயம் அடைந்தனர். அதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது ஜெய் மருத்துவமனை. இது தாஜ் மகாலில் இருந்து 2.5 கிமீ தொலைவில் ஆக்ரா- டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த மருத்துவமனையின் வரவேற்பரையில் நேற்று மாலை குண்டு வெடித்தது. இதில் 15 பேர் காயம் அடைந்தனர். அதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்தர பிரதேச டிஜிபியின் முதல் கட்ட அறிக்கைப்படி இரண்டு மருத்துவமனைகளுக்கு இடையேயான பகை தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
தீவிரவாதிகள் வேலையாகவும் இருக்கலாம். இந்நிலையில் எதுவும் சொல்ல இயலாது. விசாரணைக்குப் பிறகே எதையும் சொல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து வயர்களும், ஒரு பேட்டரியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டை வரவேற்பரையில் உள்ள பெஞ்ச் அடியில் வைத்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் ஜன்னல்கள் சேதமடைந்தன. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
குண்டுவெடிப்பு நடந்தவுடன் மருத்துவமனையில் இருந்த 97 நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். போலீசார் அந்த இடத்தை தீவிரமாக சோதனையிட்டனர்.
நாற்காலிக்கு அடியில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த குண்டு வெடித்ததால் அந்த அறை சேதமடைந்தது என்று ஆக்ரா ஐஜிபி பி.கே. திவாரி தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் நிறைய டிபன் பாக்ஸுகள், ஒரு பை, 9 வோல்ட் பாட்டரி இருந்ததாக ஆக்ரா போலீசார் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பை அடுத்து மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு படையின் வெடிகுண்டு நிபுணர்கள் ஆக்ரா விரைந்துள்ளனர். இந்நிலையில் இந்த குண்டுவெடிப்புக்கு மாநில அரசின் அஜாக்கிரதை தான் காரணம் என்று ஆக்ராவைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஆர். எஸ். கதேரியா குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications