பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் நாளை பந்த்: எதிர்கட்சிகள் அழைப்பு

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் தேசிய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும், இந்திய மாணவர் கூட்டமைப்பினரும் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பத்திரிக்கையாளர்கள் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்த தடியடியை கண்டித்து இடது முன்னணி சார்பில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று 12 மணி நேர பந்த் நடந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காலை 9 மணி வரை பஸ்கள் ஓடின. வட்டியூர்காவு, பாப்பனங்காடு உள்பட பல பகுதிகளில் நடத்தப்பட்ட கல்வீச்சில் 13 அரசு பஸ்கள் சேதமடைந்தன. இதில் ஒரு மாணவன், 2 டிரைவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும் கேரள மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் சில வங்கிகள் மீதும் கற்கள் வீசப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பஸ்கள் ஓடாததால் அரசு அலுவலர்களின் வருகை குறைவாக இருந்தது. இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த எதிர்கட்சியான இடது முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications