உள்ளாட்சி தேர்தல் பேச்சுவார்த்தை: 'அம்மா' அழைப்புக்காக காத்திருக்கும் புதிய தமிழகம்
சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவின் அழைப்புக்காக காத்திருப்பதாக புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இது குறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது,
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் தான் கூட்டணி. இது குறித்து அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதிய தமிழகம் கட்சி சார்பில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்.
அதிமுகவினர் கம்யூனிஸ்ட் கட்சியினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விரைவில் எங்களையும் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் அழைப்புக்காகத் தான் காத்துக்கொண்டிருக்கிறோம். பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் பிறந்தநாளை அரசு விழாவாக்க வலியுறுத்தி வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications