திருவெண்ணைநல்லூர்-22 வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்த 70 வயது கொடூரன்
திருவெண்ணைநல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூரில், 22 வயது இளம் பெண்ணை துரத்தித் துரத்தி பலாத்காரம் செய்ய முயன்ற 70 வயதுக் கொடூரன், அந்த முயற்சி பலிக்காததால் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. அப்பகுதி மக்கள் கடும் போராட்டம் நடத்தியதைத் தொடர்நது போலீஸார் இந்த மனித மிருகத்தைக் கைது செய்தனர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் என்பவர் திருவெண்ணைநல்லூரில் மருத்துவமனை வைத்துள்ளார். மருத்துவமனையை ஒட்டி மருந்துக் கடையையும் அவர் நடத்தி வருகிறார். மருத்துவமனையின் மேற்பார்வையாளராக ராதாகிருஷ்ணனின் 2வது மனைவியின் மாமாவான ராஜசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 70.
மருத்துவமனையில் பணியாற்றி வந்த சரண்யா என்ற 22 வயது இளம் பெண்ணிடம், அடிக்கடி அசிங்கமாகப் பேசி கிண்டல் செய்து சீண்டி வந்துள்ளார் ராஜசேகர். இதனால் குமுறிய சரண்யா வீட்டில் புகார் கூறினார். ஆனால் அவரது தாயாரோ, வயதானவர், அப்பா வயதில் இருப்பவர். அப்படிச் செய்ய மாட்டார். பேத்தி போல நினைத்து பேசியிருப்பார் என்று சமாதானப்படுத்தியுள்ளார்.
இதனால் தொடர்ந்து வேலைக்குப் போய் வந்துள்ளார் சரண்யா. இந்த நிலையில், சரண்யாவை மேலும் அதிகமாக சீண்டத் தொடங்கினார் ராஜசேகர். இதனால் மீண்டும் புகார் கூறியுள்ளார். கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத சரண்யாவின் குடும்பத்தினர் சீக்கிரம் கல்யாணம் செய்து வைத்து விடுகிறோம், அதுவரை வேலைக்குப் போ என்று கூறி தொடர்ந்து வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ராஜசேகரிடம் வந்து ஏன் இப்படி நடக்கிறீர்கள் என்று தட்டிக் கேட்கவும் அவர்கள் தவறியுள்ளனர்.
இது ராஜசேகருக்கு வசதியாகப் போய் விட்டது. இதனால் தனது அசிங்கத்தை தொடர்ந்து அரங்கேற்றி வந்தார். இந்த நிலையில் சரண்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்தனர் வீட்டார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு நேற்று சென்ற சரண்யா, அனைவரிடமும் தனக்கு கல்யாணம் நடக்கப் போவதாக கூறி இனிமேல் வேலைக்கு வர மாட்டேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் ராஜசேகர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் இன்று சரண்யா மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அவரை பலாத்காரம் செய்ய முயன்றார் ராஜசேகர். அவரிடமிருந்து தப்ப சரண்யா ஓடினார். ஆனாலும் விடாமல் துரத்தியுள்ளார். மருத்துவமனைக்குள் இந்த கொடூர துரத்தல் நடந்துள்ளது. தனது முயற்சி தோல்வியில் முடிந்ததை உணர்ந்த ராஜசேகர், சரண்யாவை வெளியே விட்டால் எல்லாவற்றையும் சொல்லி விடுவார் என்று பயந்து கத்தியை எடுத்து சரண்யாவை சரமாரியாக குத்திக் கொலை செய்து விட்டார்.
பின்னர் மருத்துவமனையில் இருந்த ஏதோ சில மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டு விட்டு நாடகமாடியுள்ளார்.
நடந்த சம்பவத்தைப் பற்றி அறிந்த பொதுமக்கள் மருத்துவமனை முன்பு திரண்டு விட்டனர். ராஜசேகரைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் ராஜசேகரைப் பிடித்துக் கைது செய்வதற்குப் பதில் முதலில் பொதுமக்களை தடியடி நடத்தி விரட்டினர். பின்னர் ராஜசேகரைப் பிடித்துக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையின்போது திருடினாள், கத்தியால் குத்தினேன் என்று கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் கூறியுள்ளார் ராஜசேகர். சரண்யாவின் உடலைப் போலீஸார் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூரச் சம்பவம் திருவெண்ணை நல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications