பைக் மீது மினிபஸ் மோதி காதல் ஜோடி பலி; உறவினர்கள் பஸ்சுக்கு தீவைப்பு
கோவை: கோவையில் பைக் சென்ற காதல் ஜோடி மீது, மினிபஸ் மோதியதில் 2 பேரும் பலியாகினர். இதில் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அடுத்த செல்வபுரத்தை சேர்ந்தவர் சுஜித் குமார் (32). மேட்டுபாளையம், நெல்லித்துறையில் உள்ள வேலன்நகரை சேர்ந்தவர் லோகநாயகி (20). சுஜித்குமாரும் லோகநாயகியும் காதலர்கள்.
நேற்று காலையில் 2 பேரும் மருதமலை கோவிலில், தங்கள் திருமண தேதியை நிச்சயிக்க திட்டமிட்டனர். அதற்காக லோகநாயகி, மேட்டுபாளையத்தில் இருந்து பஸ்சில் பெரியநாயக்கம்பாளையம் வந்தார். அங்கு காத்திருந்த காதலர் சுஜித் குமாருடன் கணுவாய் சாலை வழியாக மருதமலைக்கு பைக்கில் சென்றார்.
துடியலூர்-கணுவாய் சாலையில் உள்ள ராம்தாஸ் நாயுடு தோட்டம் அருகே வந்தபோது, பைக்கிற்கு எதிரே வேகமாக வந்த மினிபஸ் உடன் நேருக்குநேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் பலியாகினர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 2 தரப்பு குடும்பத்தாரும், நண்பர்களும் விபத்தை ஏற்படுத்திய மினிபஸ் மீது கற்களை எறிந்து தாக்கினர். அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது விபத்தை ஏற்படுத்திய மினிபஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு பஸ் அவ்வழியாக வந்தது. மறியலில் ஈடுபட்ட சிலர் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி, பஸ் இருக்கைகளுக்கு தீவைத்தனர். அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். மேலும் பஸ்சுக்கு தீவைத்த 7 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications