நான் மோடியைப் பாராட்டவில்லை- மெஹபூபா மறுப்ப; பாராட்டியது உண்மை என்கிறார் சுஷ்மா!
டெல்லி: நான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும், அவரது அரசின் துரித செயல்பாடுகளையும் பாராட்டிப் பேசவில்லை. இதுதொடர்பாக சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளது தவறு என்று தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி. ஆனால் முப்தி பாராட்டிப் பேசியது உண்மைதான் என்று அடித்துக் கூறியுள்ளார் சுஷ்மா சுவராஜ்.
முப்தி மோடியைப் பாராட்டியது உண்மைதான் என்று ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவும் தன் பங்குக்கு ட்விட்டரில் தட்டி விட்டுள்ள தகவலால் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.
அகமதாபாத்தில் நடந்த மோடியின் 3 நாள் உண்ணாவிரத நிறைவின்போது சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் மெஹபூபா முப்தி, மோடியைப் புகழ்ந்து பேசியுள்ளார். டெல்லியில் பிரதமர் தலைமையில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தின்போது அவர் மோடியைப் பாராட்டி என்னிடம் பேசினார். மோடி அரசில் நிர்வாக முடிவுகள் படு வேகமாக எடுக்கப்படுவதாக அவர் பாராட்டினார் என்றார்.
இது சர்ச்சையைக் கிளப்பி விட்டது. சுஷ்மாவின் கூற்றை உடனடியாக மறுத்தார் முப்தி. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,என்னைப் பற்றி சுஷ்மா சுவராஜ் கூறிய கருத்துக்கள் தவறு. இப்படி ஒரு தவறான தகவலை எப்படி எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா கூறினார் என்பது தெரியவில்லை என்றார் அவர்.
ஆனால் சுஷ்மா சுவராஜ் இதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள ட்விட்டர் தகவலில், அகமதாபாத்தில் நான் மெஹபூபா குறித்துக் கூறியது சரியான தகவல்தான். நானும், அவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல. பிரதமர் தலைமையில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம்.
அக்கூட்டத்தில் முப்தி என்னிடம் கூறியதை நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் நான்தான் பகிரங்கமாக சொன்னேன். இதுகுறித்த உண்மை அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். அன்றைய நாள் குறிப்பு விவரத்தை வெளியிட்டால் இது தெரிய வரும் என்று கூறியுள்ளார் சுஷ்மா.
இதையடுத்து இருவருக்கும் இடையிலான வாய்ச்சண்டை பெரிதாகியுள்ளது. இதற்கிடையே, சுஷ்மா கூறுவது சரிதான் என்பது போல கருத்து தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா.
இதுகுறித்து அவர் தன் பங்குக்கு விடுத்துள்ள ட்விட்டர் தகவலில், அத்தனை பேரும் கேட்ட ஒரு விஷயத்தை முப்தி ஏன் மறுக்கிறார் என்று தெரியவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
தனக்குப் பிடித்தமானவரை பாராட்டும் உரிமை முப்திக்கு உள்ளது. அப்படி இருக்கையில் முப்தியின் இந்த மறுப்பு எனக்கு வியப்பாக உள்ளது என்று கூறியுள்ளார் அப்துல்லா.
இதற்கிடையே தன்னை வைத்து பாஜகவும், ஒமர் அப்துல்லாவும் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டதால் கடும் எரிச்சலடைந்துள்ள மெஹபூபா, பாஜகவுக்கு ஏதாவது ஒருகூட்டணி அவசியம் தேவை என்ற அவசரம் இருந்தால் அவர்கள் தாராளமாக தங்களது பழைய கூட்டாளியுடன் (பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி) போய் சேர்ந்து கொள்ளலாம்.
மோடியின் கண்களில் அல்லாவைப் பார்த்தவர்கள் இவர்கள். மோடி மீது பரூக் அப்துல்லாவிற்கு இன்னும் நல்ல அபிபிராயம் உள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் குரானைக் கூட மறந்தாலும் மறந்து விடுவார். எனவே மோடியைப் புகழ இவர்களை விட நல்ல முஸ்லீம்கள் யாரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் மெஹபூபா.
இதற்கிடையே தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் நடந்தவை குறித்த விவரங்கள் கவுன்சிலின் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய உள்துரை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சுஷ்மா, மெஹபூபா கருத்துக்கள் குறித்து நாங்கள் ஆராய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications