தென் மாவட்ட வழக்குககளை மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலேயே விசாரிக்க இடைக்கால உத்தரவு
மதுரை: தென் மாவட்டத்தில் பதிவாகும் மேல் முறையீடு உள்ளிட்ட வழக்குகளை தற்காலிகமாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலேயே விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் அமைந்துள்ள உயர்நீதிமன்றக் கிளை பெரும் போராட்டத்திற்கு இடையே அமலுக்கு வந்தது. இந்த கிளையின் செயல்பாடுகளைத் தடுக்க சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் கடுமையாக முயன்றனர். இருப்பினும் மதுரை வக்கீல்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களின் விளைவாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை அமலுக்கு வந்தது, செயல்பாடும் தொடங்கியது.
இருப்பினும் ரிட் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை மதுரையில் விசாரிக்காமல் சென்னையிலேயே விசாரித்து வருவதாக நீண்ட நாட்களாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை வக்கீல்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மதுரை, திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வகையான வழக்குகளையும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்தான் விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதை நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் தென் மாவட்டங்களில் பதிவாகும் அனைத்து வகையான வழக்குகளையும் தற்காலிகமாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலேயே விசாரிக்க வேண்டும் என பெஞ்ச் உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கவும் நீதிபதிகள் பரிந்துரைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications