மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் மாநகராட்சி மேயர் பதவிகள்-தேமுதிக ஒதுக்கியது

கோவை, வேலூர் மாநகராட்சி மேயர் பதவிகளையும், 25 நகராட்சித் தலைவர் பதவிகளையும், 61 பேருராட்சித் தலைவர் பதவிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேமுதிக ஒதுக்கியுள்ளது.
இன்று நிருபர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜய்காந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக இதைத் தெரிவித்தனர்.
அதே போல 25 நகராட்சித் தலைவர்கள் பதவிகள் மற்றும் 61 பேரூராட்சித் தலைவர் பதவிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வார்டுகள் ஒதுக்கீடு குறித்து மாவட்டத் தலைவர்கள் பேசி முடிவு செய்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தேமுதிகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தலைமையிலான குழுவும், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவும் பேசி 2 மாநகராட்சிகளின் மேயர், 25 நகராட்சிகளின் தலைவர், 61 பேரூராட்சிகளின் தலைவர் ஆகிய பதவிகளுக்கான இடங்களை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மட்டத்திலான வார்டுகள் குறித்தும், மாவட்ட அளவில் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து பேசி தொகுதிப் பங்கீட்டு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக புதிதாக உருவான தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே உருவான கூட்டணியிலும் குழப்பம் ஏற்பட்டது.
தேமுதிகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நேற்று புதிய கூட்டணியை அறிவித்தன. இந்தக் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் மார்க்சிஸ்ட் அழைத்து வருகிறது.
இந்தக் கூட்டணி தொடர்பான அறிவிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் நேற்றிரவு தேமுதிக சென்னை மாநகராட்சிக்கான 200 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதனால் மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் அதிர்ச்சி நிலவியது. இந் நிலையில் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications