மேற்கு வங்க இடைத்தேர்தலில் மமதா வெற்றி- முதல் முறையாய் சட்டசபைக்கு..
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பொவானிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நந்தினி முகோபத்யாயாவை விட 54,213 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் த்ரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மத்திய ரயில்வேத் துறை அமைச்சராக இருந்த அக்கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவியேற்று 6 மாதங்களுக்குள் ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.
மமதாவுக்கு உதவும் நோக்கில் த்ரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த பொவானிபூர் எம்.எல்.ஏ. சுப்ரதா பக்ஷி கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். பசிர்ஹத் உத்தர் பகுதியின் எம்.எல்.ஏ. முஸ்தபா பின் குவசெம் கடந்த மே மாதம் 29ம் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து கடந்த 25ம் தேதி இந்த 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது. பொவானிபூர் தொகுதி இடைத்தேர்தலி்ல் மமதா பானர்ஜி தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியருமான நந்தினி முகோபத்யாயவை 54,213 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மமதா பானர்ஜிக்கு 73,635 வாக்குகளும், நந்தினிக்கு 19,422 வாக்குகளும் கிடைத்தன.
பசிர்ஹத் உத்தர் பகுதியில் த்ரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.டி.எம். அப்துல்லா தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுபித் அல் காஸியை விட 30,941 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் முதன்முறையாக சட்டசபைக்குள் நுழைந்துள்ளார் மம்தா.












Click it and Unblock the Notifications