தமிழக உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க வெளிமாநில தேர்தல் ஆணையர்கள் வருகை
சென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலை பார்வையிட வெளிமாநில தேர்தல் ஆணையர்கள் வர உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்தது. 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு பின் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறியதாவது: கடந்த 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. அது குறித்து தேர்தல் பார்வையாளர்கள் எழுதி கொடுத்த அறிக்கைகள் ஏற்கப்படாமல் தலைமை செயலரின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனால் சென்னையில் தேர்தல் பணியாற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கடப்படுகின்றனர். தற்போது 100 சதவீத சுதந்திரமாகவும், நேர்மையாக செயல்பட்டு அறிக்கையை சமர்ப்பிக்க கூறிய பிறகே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பார்வையாளர்களின் சுதந்திரத்தில் மாநில தேர்தல் ஆணையமோ, மற்ற உயர் அதிகாரிகளோ தலையிடமாட்டார்கள். சென்னையில் இந்த முறை 3 கண்காணிப்பார்கள் பணியாற்ற உள்ளனர். மேலும் நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க வெளிமாநில தேர்தல் ஆணையர்கள் பார்வையாளர்களாக வர உள்ளனர்.
தேர்தலின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கவே, வெளிமாநில பார்வையாளர்களை அழைத்துள்ளோம். இந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு வாக்குசாவடியில் 70' விண்ணப்ப படிவத்தை வாங்கி நிரப்பிக் கொடுக்கலாம். சட்டமன்ற தேர்தலில் பின்பற்றப்பட்ட மற்ற எல்லா முறைகளும் இந்த தேர்தலில் பின்பற்றப்படும், என்றார்.












Click it and Unblock the Notifications