மகாத்மா காந்தியின் 143வது பிறந்த நாள்-நாடு முழுவதும் அஞ்சலி

டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அங்கு நடந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவுக்கு திடீரென அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய பின்னர் சோனியா காந்தி கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.
பிரார்த்தனை நிகழ்ச்சி முடிந்ததும் சோனியா காந்தியிடம் சென்ற அத்வானி, அவரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க மருத்துவமனையில் சோனியா காந்திக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. ஆனால் அவருக்கு என்ன நோய், எதற்காக அறுவைச் சிகிச்சை என்பது குறித்து காங்கிரஸ் தரப்பும், சோனியா காந்தி குடும்பத்தினரும் தெரிவிக்கவில்லை.
நாடு முழுவதும் மகாத்மா காந்திக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். காந்தி சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு பல்வேறு தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். சர்வ மதப் பிரார்த்தனைகளுக்கும் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications