மின்தடையால் தொழில் பாதிப்பு- மின்சார அலுவலகத்தை முற்றுகையிட்ட பாத்திர உற்பத்தியாளர்கள்
மதுரை: தடையற்ற மின்சாரம் வழங்கக்கோரி மதுரையை அடுத்த ஒத்தக்கடையில் எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஒத்தக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் எழுநூறுக்கும் மேற்பட்ட எவர்சில்வர் பாத்திர உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதிகளில் நான்கு முதல் ஐந்து மணிநேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த பத்துநாட்களாக அடிக்கடி மின்சாரம் தடைபட்டதால் பாத்திர உற்பத்தி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் முற்றிலும் மின்சாரம் தடை செய்யப்படுவதாக கூறும் பாத்திர உற்பத்தியாளர்கள் பகல்நேரங்களில் அரைமணிநேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் நிறுத்தப்படுவதாக புகார் கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஒத்தக்கடையில் உள்ள உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
அறிவிக்கப்படாத மின்வெட்டினால் தீபாவளி பண்டிகைக்காக ஆர்டர் எடுத்துள்ள பாத்திரங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. வேலை இல்லாததால் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய்க்கு மேல் கூலி பெற்று வந்த தொழிலாளர்கள் தற்போது வாரத்திற்கு இருநூறு ரூபாய் கூட கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
இதனால் மத்திய, மாநில அரசுகள் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாத்திர உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒரே சமயத்தில் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் மின்வாரிய அதிகாரி அலுவலகத்தில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications