மாறன் வீடுகளில் 'ரெய்டு'-மார்பக புற்றுநோய் குறித்து சன் நியூஸில் விளக்கம்!
சென்னை: 2ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் வீடுகள் மற்றும் சன் டிவி அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடந்து கொண்டிருக்கையில், அதுகுறித்து சன் நியூஸ் சானலில் ஒருவரி கூட செய்தி இல்லை. மாறாக மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக விற்க வைத்த விவகாரத்தில் தயாநிதி மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது சிபிஐ எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்துள்ளது.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில், மாறன் சகோதரர்கள் தவிர மேக்சிஸ் அதிபரான ஆனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் குழுமத்தைச் சேர்ந்த 'அஸ்ட்ரோ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது கிரிமினல் சதி வழக்கு பதிவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று தயாநிதி மாறனின் சென்னை போட் க்ளப் வீடு, சென்னை அலுவலகம், ஹைதராபாத்-டெல்லி வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
அதே போல சன் டிவி அலுவலகத்திலும் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இது தவிர மாறன் சகோதரர்களுக்கு மிக நெருக்கமான சிலரின் வீடுகளிலும் சோதனைகள் நடந்து வருகிறது.
மாறன் சகேதரர்களின் வீடுகளும், சன் டிவி அலுவலகமும் சிபிஐ அதிகாரிகளின் திடீர் சோதனையால் பரபரத்துக் கொண்டிருக்கையில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை குறி்த்து டாக்டர் என். சுதாகர் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்.
சன் டிவி அலுவலகமை ரெய்டால் அல்லோகல்லோலப்பட்டாலும், அதுகுறித்து பரபரப்பு சானலில் தென்படவில்லை. மாறாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் பிற செய்திகள் தான் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications