பேரறிவாளன் உள்ளிட்டோர் வழக்கை மாற்றக் கோரும் மனு- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தொடர்பான தூக்குத் தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற மிகுந்த கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 வருடங்களை சிறையில் கழித்த பின்னர் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது என்பது 2 தண்டனை தருவது போலாகும். எனவே தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றுகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. தீர்ப்பை அறிவதற்காக உயர்நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கூடினர். தீர்ப்பை வரவேற்று அவர்கள் உற்சாக குரல் எழுப்பினர், இனிப்புகளையும் வழங்கிக் கொண்டாடினர். உயர்நீதிமன்ற வரலாற்றில் இப்படி ஒரு எழுச்சியை அதற்கு முன்பு கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படிப்பட்ட வெளிப்புறத்திலிருந்து அழுத்தம் தரும் வகையிலான சூழலில் வழக்கை நடத்தக் கூடாது. மேலும் இதேபோன்ற ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அங்கு சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனு இன்று நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான 2 பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் உள்ளிட்டோர் தரப்பில் ராம்ஜேத்மலானி ஆஜரானார். அவர் வாதிடுகையில், இந்த வழக்கால், மனுதாரருக்கு எந்தவிதமான பாதிப்பு இல்லை. எனவே அவர் இந்த வழக்கை தொடர முகாந்திரம் இல்லை. எனவே இதை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். வழக்கை சென்னையிலேயே நடத்த உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், வெளிப்புற சூழ்நிலை குறித்து தாங்கள் இப்போது கருத்தில் கொள்ளப் போவதில்லை என்று கூறினர். அதேசமயம், இதேபோன்ற ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அக்டோபர் 19ம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என்றும், அதற்குள் தமிழக அரசு தனது விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications