டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் லீவு - மகா கடுப்பில் குடிமகன்கள்!
இந்த சோகத்தைத் தீர்க்க, இப்போதிலிருந்தே கிடைத்த சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் கடைகளில் கூட்டம் அலைமோத ஆரம்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6,691 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. சென்னையில் 482 கடைகள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் கடைகள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி திறந்து இருக்கும். காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் உள்பட குறிப்பிட்ட சில நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும்.
அதேபோல், சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாட்களிலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 21-ந் தேதி நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 15-ந் தேதி மாலை 5 மணி முதல் 19-ந் தேதி மாலை 5 மணி வரையும் (5 நாட்கள்) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 21-ந் தேதி அன்றும் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருக்கும்.
டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. அதன்படி பார்த்தால் மாதத்திற்கு சராசரியாக ஒன்றே கால் கோடி லாபம் கிடைக்கும். தற்போது தொடர்ந்து 6 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் அரசுக்கு கணிசமான அளவு வருமான இழப்பு ஏற்படும்.
இருப்பினும் தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலைமோதும் குடிமகன்கள்
நாளை மாலையிலிருந்தே சரக்கு கிடைக்காது என்பதால், குடிமகன்கள் கிடைத்தவரை வாங்கி ஸ்டாக் வைப்பதில் மும்முரமாக உள்ளனர். இதனால் ரேஷன் கடைகளில் உள்ள கூட்டத்தைவிட இருமடங்கு கூட்டம் டாஸ்மாக் கடைகளில் அலைமோதுகிறது.
சரக்கை மொத்தமாக வாங்கி பதுக்கி வைக்கும் முயற்சியிலும் சிலர் தீவிரமாக உள்ளனர். விடுமுறை நாளில் கள்ளத்தனமாக விற்கும் ஆசாமிகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.