அரசியல் கருத்துகளை பதிவிடும் 18 X தள கணக்குகளை முடக்கியதை எதிர்த்து வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் எக்ஸ் தள கணக்குகளை முடக்க, அந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அனுப்பிய நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 18 எக்ஸ் தள கணக்குகளின் முடக்கத்தை நீக்கவும், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவொட்டுள்ளது ஐகோர்ட்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டன. 108 இடங்களில் வெற்றி பெற்று விஜய் தலைமையிலான தவெக, மற்ற கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 10 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பேற்றது. இன்று சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

தமிழக அரசை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி அதுதொடர்பாக எக்ஸ் தள பக்கங்களில் இடம்பெற்ற கணக்குகளை முடக்க தமிழக சைபர் கிரைம் பிரிவு கடந்த மே 8 ஆம் தேதி எக்ஸ் தளத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவ்வாறு முடக்கவில்லை என்றால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவைடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்த எக்ஸ் பக்கங்களில் சில பிரபல அரசியல் விமர்சகர்கள் பக்கங்களும் அடக்கம். இது அரசுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்கும் சர்வாதிகார செயல் என அவர்கள் தரப்பில் இருந்து கண்டங்கள் எழுந்தன. இதை எதிர்த்து விஷ்வ இந்து பரிஷத் வட தமிழகத்தின் தலைவர் சொக்கலிங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், அரசியல் ரீதியான விமர்சனங்களை முறையாக ஆய்வு செய்யாமல், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி எக்ஸ் தள கணக்குகளை முடக்குவது கருத்துரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும். வன்முறையை தூண்டும் விதமாகவோ, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ இல்லாத விமர்சனங்களை பதிவிட்ட எக்ஸ் தள கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இது சட்டவிரோதமானது.
எக்ஸ் தள கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கும் எதற்காக முடக்கப்பட்டது என்ற தகவல்களும் தெரிவிக்கப்படுவதில்லை. எனவே, அரசியல் ரீதியாக கருத்துகளை வெளிப்படுத்தும் எக்ஸ் தள கணக்குகளை முடக்க சைபர் க்ரைம் பிரிவு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் எக்ஸ் கணக்குகளை முடக்க, எக்ஸ் நிறுவனத்துக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications