தேமுதிகவை ஆதரித்து காங். எம்.எல்.ஏ. விஜயதாரணி பிரசாரம் - குமரியில் பரபரப்பு
அருமனை: குமரி மாவட்டம் அருமனையில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பிரசாரம் செய்தார். அவரது பிரசார வாகனத்தில் தேமுதிக வேட்பாளர்கள் மற்றும் தேமுதிக கொடி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்டம் அருமனை பேரூராட்சி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி பிரசாரம் செய்தார். அருமனை சந்திப்பு மற்றும் குஞ்சான்விளை உள்ளிட்ட பகுதிகளில் அவர் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது தேமுதிக வார்டு வேட்பாளர்கள் சிலர் உடன் இருந்தனர். விஜயதாரணி தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பேசியவாறு வந்தார்.
திடீரென தேமுதிக மாவட்ட பொறுப்பாளர் ஜடன்சோனி தலைமையில் வந்த சிலர் விஜயதாரணி எம்எல்ஏ மற்றும் காங்கிரசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் அருமனை இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
வேண்டுமென்றே காங்கிரசார் பிரச்சனை ஏற்படுத்துவதற்காக தேமுதிகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள் என்றும், அவர்கள் வாகனத்தில் இருக்கும் தேமுதிக கொடியை அகற்ற வேண்டும் என்றும் போலீசாரிடம் தேமுதிகவினர் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். இதையடுத்து விஜயதாரணி எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இது குறித்து விஜயதாரணியிடம் கேட்டபோது உள்ளாட்சி தேர்தலில் உள்ளூர் கூட்டணி எல்லாம் சகஜம்தான். அனைத்து அரசியல் கட்சியிலும் இந்த நிலை உள்ளது என்றார்.