மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தக்கோரி மன்னாதம்பாளையம் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
ஈரோடு: காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை கண்டித்து மன்னாதம்பாளையம் கிராம மக்கள் தங்களது வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி, உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஈரோடு அருகே காவிரி ஆற்றுக்கும், காலிங்கராயன் வாய்க்காலுக்கும் நடுவே அமைந்துள்ளது மன்னாதம்பாளையம் கிராமம்.
இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.
இந்த கிராமம் அமைந்திருக்கும் காவிரிக்கரையில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் மணல் அள்ள அனுமதி பெறப்பட்டது. ஆனால் அரசு அனுமதியை தாண்டி பல ஏக்கர் நிலப்பரப்பில், 25 அடி ஆழத்துக்கும் மேல் மணல் அள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் வரும் போதும், பாசூர் நீர்மின் நிலையத்தில் தண்ணீர் தேக்கும் போதும் இந்த ஊர் அழிந்துவிடும் அபாயத்தில் இருப்பதாக கிராம மக்கள் குமுறுகின்றனர்.
மணல் அள்ளுவதை உடனே நிறுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாக்கத்திடம் கிராம மக்கள் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவி்ல்லை என்று கூறப்படுகின்றது.
எனவே அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவி்க்கும் வகையில், மன்னாதம்பாளையம் கிராம மக்கள், தங்களது வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி, உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.