'கூடங்குளம்': அச்சத்தை போக்க வேண்டியது உங்கள் கடமை-பிரதமரிடம் திமுக
டெல்லி: கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் பொதுமக்களின் கருத்துக்கு முன்னுரி்மை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக கூறியுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி சார்பில் அக் கட்சியின் எம்பி டி.ஆர்.பாலு பிரதமரை நேரில் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு பெயர் பெற்ற ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் நிகழ்ந்த அணு உலை விபத்துக்களும், அதனால் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர் சேதங்களும், பொருட் சேதங்களும் வரலாற்று உண்மைகளாக ஆகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட ஒரு விபத்து தமிழகத்தில் கூடங்குளம் அணு மின் நிலையங்களில் நேர்ந்து விடுமோ என்ற பொது மக்களின் நியாயமான அச்சத்தை போக்குவது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை.
பொது மக்களின் நியாயமான அச்சத்தைப் போக்கும் வகையில், இரு அரசுகளும் இணைந்து மக்களுக்கு உரிய விழிப்புணர்ச்சியையும் நம்பிக்கையையும் தந்து, அவர்களின் முழு நம்பிக்கையை பெற்ற பிறகே, கூடங்குளம் அணு உலைகள் செயல்பாட்டுக் கொண்டு வரப்பட வேண்டும்.
தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் அத்தியாவசிய தேவை என்றாலும், பொது மக்களின் கருத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற திமுகவின் நிலைப்பாட்டினையும் கருணாநிதியின் கருத்தினையும் பிரதமரிடம் டிஆர்.பாலு தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications