சிறிய கட்சிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்க போகும் உள்ளாட்சி தேர்தல்!
நெல்லை: முதல் முறையாக அத்தனை கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டாலும், பெரிய கட்சிகளை விட சிறிய கட்சிகளுக்குத்தான் இந்தத் தேர்தல் ஒரு ஆசிட் டெஸ்ட் ஆக அமைந்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து விரல்களில் வைத்த மை அழியும் முன் உள்ளாட்சிக்கும் தேர்தலை அறிவித்தது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக அணிகளோடு கூட்டணியிலிருந்த கட்சிகள் கழட்டிவிடப்பட்டு அனைத்து கட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன.
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் கடந்த 5ம் தேதி முதல் தொடங்கியது. தமிழகமெங்கும் முதல்வர் ஜெயலலிதா தீவிர தேர்தல் சுற்று பயணத்தை 3 தினங்களில் நடத்தி முடித்தார். அதே போன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அவரது மனைவி பிரேமலதாவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
திமுக திருச்சி இடைத்தேர்தலில் காட்டிய வேகத்தை தமிழக உள்ளாட்சி தேர்தலில் காட்டாமல் குறிப்பிட்ட அளவே பிரச்சாரத்தை மேற்கொண்டது. இந்திய கம்யூ சார்பில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோர் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மதிமுக பொது செயலாளர் வைகோ த்மிழகமெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டார். பாமக வட மாவட்டங்களிலும், திருமாவளவன் அதே போல் வடமாவட்டங்களிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
இந்த உள்ளாட்சி தேர்தல் அனைத்து அணிகளும் தனியாக களம் காணுவதால் அவர்கள் வாங்கும் வாக்குகளைப் பொறுத்தே அவற்றின் எதிர்காலம் அமையும் எனலாம்.
குறிப்பாக புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, மதிமுக உள்ளிட்டவை எந்த அளவுக்கு வாக்குகளைப் பெறுகின்றனவோ அதை வைத்துத்தான் அவர்கள் லோக்சபா தேர்தலில் யாருடனாவது கூட்டணி சேர உபயோகமாக இருக்கும். அப்போதுதான் கூடுதல் சீட்களைக் கேட்டுப் பேரம் பேச சரியாக இருக்கும் என்பதால் இந்தக் கட்சிகள்,தாங்கள் வாங்கும் வாக்குகள் குறித்து அதிக கவலையுடன் உள்ளன.
இவற்றை விட முக்கியமாக தேமுதிகதான், தனது வாக்கு வங்கி அப்படியே உள்ளது என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது. அதிமுகவிடம் போய்ச் சேர்ந்து, போன வேகத்திலேயே உதறித் தள்ளப்பட்டு விட்டதால் தேமுதிகவுக்கு இந்தத் தேர்தல் பிரஸ்டிஜ் பிரச்சினையாகியுள்ளது. எனவே தனது நிலை சரியவில்லை, ஸ்திரமாகவே இருக்கிறோம் என்பதைக் காட்டியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது தேமுதிக.
அதேசமயம், திமுக, அதிமுகவும் கூட தங்களது செல்வாக்கை நிரூபித்தாக வேண்டிய நிலை. கூட்டணிக் கட்சிகள் இல்லாமலும் கூட தங்களால் வெல்ல முடியும் என்பதை இவர்கள் காட்டியாக வேண்டும்.
மொத்தத்தில் அத்தனை கட்சிகளுக்குமே இந்த தேர்தல் ஒரு பலப் பரீட்சையாகவும், பலத்தை நிரூபிக்கப் போகும் காட்சியாகவும் அமைந்துள்ளது என்று கூறினால் அது மிகையில்லை.












Click it and Unblock the Notifications