2வது கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு- விறுவிறுப்பாக நடந்து முடிந்தது

65 முதல் 70 சதவீத வாக்குகள் இந்த வாக்குப் பதிவில் பதிவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.
முதல் கட்ட வாக்குப் பதிவைப் போல இல்லாமல் இந்த முறை படு விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்தது. காலை முதல் மாலை வரை தொடர்ந்து சுறுசுறுப்பாக வாக்குப் பதிவு நடந்தது.
சென்னைப் புறநகர்களான தாம்பரம், பல்லாவரம், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
முதல் கட்ட வாக்குப் பதிவின்போது சென்னையில் மந்தமான நிலை காணப்பட்டது. ஆனால் இன்றைய வாக்குப் பதிவின்போது காலையிலிருந்தே நல்ல விறுவிறுப்பு காணப்பட்டது. அனைத்துப் பகுதிகளிலுமே மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து படு ஆர்வமாக வாக்குகளைப் பதிவு செய்தனர். குறிப்பாக பெண்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்கள் காலையிலேயே பெருமளவில் வாக்குச் சாவடிகளுக்குத் திரண்டு வந்து வாக்களித்தனர். சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
சில பகுதிகளில் மட்டும் மின்னணு எந்திரங்களில் பழுது, வெப் காமராக்கள் செயல்படவில்லை என்ற புகார்கள் இருந்தன. அவையும் கூட சரி செய்யபப்ட்டு வாக்குப் பதிவு தொடர்ந்து நடந்தது.
பெரிய அளவில் எந்தப் பகுதியிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக தகவல் இல்லை.
2-ம் கட்ட வாக்குப்பதிவுக்காக 38,020 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1,92,67,501 வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 80 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
21ம் தேதி வாக்கு எண்ணிக்கை
இரு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளதைத் தொடர்ந்து 21ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications