தமிழகம் முழுவதும் பரவலாகக பலத்த மழை-பல பகுதிகள் வெள்ளக்காடானது

கன்னி்யாகுமரிப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இது தற்போது மேலும் நகர்ந்து, வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்துக் கட்டுகிறது. அதேபோல கடலோர தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்துள்ளது. சென்னையில் இன்று காலை நல்ல மழை பெய்தது.
சென்னையில்...
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது.
இன்று காலையில் வெளுத்து வாங்கிய மழை பின்னர் படிப்படியாக குறைந்தது. இருப்பினும் தற்போது விட்டு விட்டுமழை பெய்து வருவதால் நகரமே சகதிக் காடாகியுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் சாலைகள் பெயர்ந்து போய் படுமோசமாக காட்சி தருகின்றன. இதனால் வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
ஆங்காங்கு சாலைகள் பள்ளமாக காணப்படுவதால் டூவீலர்கள் செல்வது பெரும் சிரமமாகியுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் நிலைமை படு மோசமாக உள்ளது. பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து காணப்படுவதால் தீவுகள் போல பல பகுதிகள் மாறியுள்ளன.
டெல்டா பகுதிகளில் கன மழை
இதேபோல டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
மன்னார்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்றும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்ததால் மாவட்டமே வெள்ளக்காடாகியுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் தொடரும் மண் சரிவு
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரத்தில் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் பழனி மலையில் யானைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்த சம்பவங்கள், வீடுகள் இடிந்து விழுந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
சென்னை உள்பட தமிழகத்தில் தாழ்வான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளது.
ரயில் போக்குவரத்தில் தாமதம்
தொடர் மழை காரணமாக தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் ரயில்களின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது. மழை காரணமாக, ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் உள்ள பகுதிகளில் ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில்கள் தாமதமாக வருகின்றன.












Click it and Unblock the Notifications