அராஜகத்தின் உச்சிக்கே சென்று திமுகவின் வெற்றியை தட்டிப்பறித்த அதிமுக: கருணாநிதி தாக்கு
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு வழங்க வேண்டிய வெற்றிச் சான்றிதழ்கள் மேலிடத்தின் மிரட்டலால் அதிமுகவினருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் தோல்வியுற்ற இடங்களில் அராஜகத்தின் உச்சிக்கே சென்று திமுகவினரின் வெற்றியை தட்டிப்பறித்துள்ளதாக, திமுக தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உள்ளாட்சித் தேர்தல்கள் எப்படி நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பற்றிய விவரங்கள் சில ஏடுகளில் வந்துள்ளன.
உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியுற்ற இடங்களில் அதிமுகவினர் அராஜகத்தின் உச்சிக்கே சென்று வெற்றி பெற்றவர்களைத் தாக்குவது, அவர்களது இல்லங்களை சூறையாடுவது, வீட்டில் இருக்கும் பெண்களை தாக்குவது என்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டனர். அதிமுகவினரின் அராஜகத்துக்கு காவல்துறை அதிகாரிகளும் துணை போனார்கள்.
நாகை மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு திமுகவினர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்திரத்தில், திமுக தேர்தல் அலுவலங்கள் சூறை, இரு சக்கர வாகனங்கள் சேதம், உருட்டுக்கட்டை அடி என அதிமுகவினர் கோரத் தாண்டவமாடினர். பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளான திமுகவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற திமுகவினருக்கு வழங்கப்பட வேண்டிய வெற்றி சான்றிதழ், மேலிடத்தின் மிரட்டலுக்கு அஞ்சிய பிடிஓக்களால் அதிமுகவினருக்கு வழங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளருக்கு ஆதரவாக பெண் கவுன்சிலர்களை போலீசாரே குண்டுக்கட்டாக ஜீப்பில் ஏற்றிய திருவிளையாடலும் அரங்கேறியது. உள்ளாட்சி மன்றத் தேர்தலை அதிமுக அரசு நடத்திய லட்சணம் தான் இந்த விவரங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.