மாநிலம் முழுவதும் டூர் போய் பாமகவினரிடம் நீதி கேட்கப் போகிறேன்- வேல்முருகன்
சென்னை: என்னை பாமகவிலிருந்து நீக்கியது நியாயமா என்று பாமக தொண்டர்களை நேரில் சந்தித்து நீதி கேட்கப் போகிறேன். வேறு எந்தக் கட்சியில் இணையும் திட்டமும் என்னிடம் இல்லை என்று பாமகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள வேல்முருகன் கூறியுள்ளார்.
பாமகவில் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த பண்ருட்டி வேல்முருகனை திடீரென கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள் ராமதாஸும், அவரது கட்சி நிர்வாகிகளும். இதனால் வேல்முருகன் ஆதரவாளர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில் வேல்முருகன் திமுகவில் சேரலாம் என்ற தகவல் பரவியுள்ளது. காரணம், வேல்முருகன் திமுக தலைவர் கருணாநிதியின் அன்பைப் பெற்றவர். அவரது சுறுசுறுப்பான செயல்பாட்டுக்காக பலமுறை கருணாநிதி வாயால் பாராட்டப்பட்டவர். இதனால் அவர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் சேருவார் என்ற தகவல் பரவியுள்ளது.
இருப்பினும் அதை மறுத்துள்ளார் வேல்முருகன். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இன்னும் பாமகவில்தான் இருக்கிறேன். பாமகவிலிருந்து என்னை நீக்கியது குறித்து எனக்கு எந்தத்தகவலும் வரவில்லை.அப்படி வந்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து முடிவு செய்வேன்.மற்றபடி இப்போது நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணத்தில் இல்லை.
நான் நீக்கப்பட்டது நியாயமா என்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாமக தொண்டர்களிடம் நீதி கேட்கப் போகிறேன் என்றார்.
பாமகவுக்கு மக்களிடையே நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தலித் எழில்மலை, பேராசிரியர் தீரன், பு.தா.அருள்மொழி என பலரையும் பாமக கட்சியைவிட்டு விரட்டி விட்டுவிட்டது. புதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் ராமதாஸ், சத்தம் போடாமல் அரசியலை விட்டே ஒதுங்கிவிட்டார். இப்போது வேல்முருகனையும் நீக்கியிருப்பது பாமகவினர் மத்தியிலேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியே போனால் கட்சியில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் கட்சித் தலைவர் கோ.க. மணி, முன்னாள் அமைச்சர் அ.கி.மூர்த்தி ஆகியோர் மட்டுமே மிஞ்சுவார்கள் என்று பாமக அபிமானிகள் புலம்புகின்றனர்.