ராஜபாளையம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் மீட்பு
ராஜபாளையம்: தென்மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் ராஜபாளையம் அருகே அய்யனார் கோவில் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் சிக்கிய மதுரை கல்லூரி மாணவர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்து வரும் கனமழையினால் தேவதானம் சாஸ்தா கோவில் அணை நிரம்பி வழிகிறது. ராஜபாளையம் அருகே உள்ள காட்டாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனப் பகுதியை ஒட்டியுள்ள நீர்காத்த அய்யனார் கோயிலுக்கு சுற்றுலா வந்த மதுரையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் செவ்வாய்க்கிழமையன்று ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது காட்டாற்றில் நீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் (20), செய்யது இப்ராஹிம் (22), ரமேஷ் (21) உள்பட 8 கல்லூரி மாணவர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆற்றில் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து ராஜபாளையம் தீயணைப்பு அதிகரிகளும், வீரர்களும் அய்யனார் கோயில் ஆற்றுக்குச் சென்று கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
வெள்ளநீர் அதிகரித்து வருவதால் ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.