6 மாதத்தில் பதவியிழந்த சண்முகநாதன்- 2 வது முறையும் பாதியிலேயே வெளியேற்றம்
நெல்லை: 2வது முறையாக ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பிடித்த சண்முகநாதன், முதல் முறையைப் போலவே இரண்டாவது முறையான தற்போதும் பாதியிலேயே பதவியை பறிகொடுத்துள்ளார்.
இதன் மூலம் ஸ்ரீவைகுண்டத்துக்கு கிடைத்த விஐபி அந்தஸ்து பாதியிலேயே பறிக்கப்பட்டுள்ளது.
2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்பி சண்முகநாதன். அம்மாவட்டத்தில் பவர்புல்லாக திகழ்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்ததால் கட்சியை பலப்படுத்த சீனியரான சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராகவும், பதவி வகித்ததால் இவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் பதவியேற்ற 6 மாதத்தில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டிலும் இதே ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்பி சண்முகநாதன். அப்போது அவருக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் 9 மாதத்திலேயே சண்முகநாதனின் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. 2006 – ம் ஆண்டுவரை எம்எல்ஏவாகவே பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.
இந்நிலையில் 2வது முறையாக பதவியேற்ற சண்முகநாதன் அமைச்சரவையில் 6 மாதங்கள் மட்டுமே நீடித்துள்ளார். இதனால் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு கிடைத்த விஐபி அந்தஸ்து மீண்டும் பறிபோயுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள் கிடைத்த நிலையில் சண்முகநாதனின் பதவி பறிக்கப்பட்ட போதும் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications