ஜாமீன் மனு தள்ளுபடி- புதுவை கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம் தலைமறைவு
சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு போலீசாரால் அவர் எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.
10ம் வகுப்பு தேர்வை தனக்குப் பதில் வேறு ஒருவரை விட்டு எழுதியதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்தின் மீது விழுப்புரம் போலீஸில் புகார் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து கல்யாண சுந்தரத்தை கைது செய்ய விழுப்புரம் போலீஸ் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கல்யாண சுந்தரம் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த திண்டிவனம் நீதிமன்றம் கல்யாண சுந்தரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் அவரது முன்ஜாமீன் மனு செவ்வாய்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பழனிவேலு, கல்யாண சுந்தரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.
இதனையடுத்து கல்யான சுந்தரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீங்கியுள்ளது. ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தமிழ்நாடு போலீசாரால் அவர் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்ப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் இல்லாததால் ஏமாற்றம்
இதனிடையே கல்யாண சுந்தரம் சென்னையில் இருந்து புதுச்சேரி வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, மரக்காணம் செக் போஸ்டில் போலீசார் காத்திருந்தனர். அப்போது வந்த காரை போலீசார் சோதனை செய்ததில் அமைச்சர் இல்லாததை கண்டு ஏமாந்தனர். காரில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது கல்யாணசுந்தரம் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக குற்றச்சாட்டு
இதனிடையே தேடப்படும் குற்றவாளியாக உள்ள கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம் முதலமைச்சர் ரங்கசாமியின் பாதுகாப்பில்தான் உள்ளார் என்று புதுவை அதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேடப்படும் குற்றவாளிக்கு அதரவு அளித்துள்ள புதுச்சேரி மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications