கடையடைப்பால் களை இழந்த தி.நகர்: 3,000 வியாபாரிகள் பங்கேற்பு
சென்னை: சென்னை தியாகராய நகரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைத்து வியாபாராத்தை முடக்கிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு எதிராக வியாபாரிகள் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எப்பொழுதும் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட முக்கிய வியாபாரப் பகுதிகள் வெறிச்சோடியுள்ளன.
விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த கட்டடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து அக்டோபர் 31ம் தேதி சீல் வைத்தனர். தியாகராய நகரில் 27 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் அதில் இயங்கிவந்த 500க்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்களில் வேலையை இழந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர்.
இந்த நிலையில் விதிமீறி கட்டப்பட்ட மேலும் 32 கடைகளுக்கு விளக்கம் கேட்டு சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான காலக்கெடு இம்மாதம் 16 –ம் தேதி முடிவடைவதை ஒட்டி 17ம் தேதி முதல் மீண்டும் சீல்வைப்பு நடவடிக்கை ஆரம்ப மாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
களை இழந்த ரங்கநாதன் தெரு
சிஎம்டிஏவின் நடவடிக்கையை கண்டித்தும் சீல்வைக்கப்பட்ட கட்டடங்களை உடனடியாக திறக்க அனுமதி கோரியும் தியாகராய நகர் வியாபரிகள் இன்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் இந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்ப்பதற்காக தியாகராய நகரில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் ரங்கநாதன் தெரு களையிழந்துள்ளது.
ஆலோசனைக் கூட்டம்
மேலும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைக் கூட்டத்திற்கும் வியாபாரிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்திற்கு ரெங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்கத் தலைவர் சித்திரைப்பாண்டியன் தலைமை தாங்குகிறார்.பனகல் – உஸ்மான் ரோடு வியாபாரிகள் சங்கம், பாண்டிபஜார் வியாபாரிகள் சங்கம், அன்னை சத்யா பஜார் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர் என்று வியாபாரிகள் சங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.