கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பேச்சிப்பாறை தண்ணீர் கொடுப்பதற்கு கண்டனம்
குமரி: கூடங்குளம் அணுமின் நிலைய பயன்பாட்டிற்கு பேச்சிப்பாறை தண்ணீரை விடுவதற்கு பரிந்துரை செய்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு பூமிபாதுகாப்பு சங்க கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து குமரி மாவட்ட பூமிபாதுகாப்பு சங்க கூட்டமைப்பு தலைவர் டாக்டர் பத்மதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நூற்றாண்டு பெருமை வாய்ந்த பேச்சிப்பாறை அணையை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. அணையின் நீர் இருப்பு குறைந்த காலங்களில் எல்லாம் பயிர்கள் வாடிகருகியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் இருந்தாலும் இருபோக நெல்சாகுபடியை முழுமையாக செய்ய முடியவில்லை.
குமரி மாவட்ட மக்களுக்குத் தேவையான தண்ணீரே பேச்சிப்பாறை அணை மூலம் கிடைக்காத நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளுக்கு தேவையான தண்ணீரை பேச்சிப்பாறை அணையில் எடுக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் குமரி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பேச்சிப்பாறை அணை நீரை கொடுத்தால் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில் மேலும் சிக்கலாகி குமரி மாவட்ட விவசாயம் கடுமையாக பாதிப்படையும். விவசாயிகளும் பாதிக்கப்படுவர்.
குமரி மாவட்டமும் பாலைவனமாக மாறிவிடும் என்பதை கருத்தில் கொண்டு குமரி மாவட்ட பூமிபாதுகாப்பு சங்க கூட்டமைப்பு விவசாயிகளை ஒன்று திரட்டி கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தது. இந்த எதிர்ப்பின் காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து கூடங்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட்டு கடல்நீரை நன்னீராக மாற்றி பயன்படுத்திட திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மனித உயிர்களுக்கு பாதுகாப்பில்லாத கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படக் கூடாது, மூடவேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களும் போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில் அவர்களின் எதிர்ப்பை சமாளிக்கவும், சமாதானப்படுத்தவும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெந்தபுண்ணில் வேல்பாச்சுவது போல கூடங்குளம் பயன்பாட்டிற்கு பேச்சிப்பாறை அணை நீரை கொடுக்க பரிந்துரை செய்துள்ளார்.
இதை குமரி மாவட்ட பூமிபாதுகாப்பு சங்க கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு மீண்டும் கூடங்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியில் அரசு ஈடுபடுமேயானால் அதை விவசாயிகள் தங்கள் உயிரை கொடுத்தேனும் தடுத்து நிறுத்துவார்கள். அத்துடன் கைவிடப்பட்ட திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க கூடாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.